Archives: ஜூலை 2022

“உங்களுக்கு சொந்தமாக்குங்கள்!"

ஜூன் 11, 2002 அன்று, “அமெரிக்கன் ஐடல்” என்னும் பாடும் போட்டி துவங்கியது. ஒவ்வொரு வாரமும், பங்கேற்றவர்கள் பிரபலமான பாடல்களில், தங்கள் சொந்த வரிகளில் பாடினார்கள். பார்வையாளர்கள், போட்டியின் அடுத்த சுற்றுக்கு யார் முன்னேறினார்கள் என்று வாக்களித்தனர்.

நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான, ராண்டி ஜாக்சன், “நீங்கள் அந்தப் பாடலை உங்களுடைய சொந்த பாடலாக்கிக்கொண்டீர்கள்” என்று அவர்களைப் பாராட்டுவது வழக்கம். ஒரு பாடகர், ஒரு பழக்கமான ட்யூனை எடுத்து, அதை கற்றுக்கொண்டு, அதை ஒரு தனித்துவமான புதிய வழியில் பாடியபோது அவர் அந்தப் பாராட்டுகளுக்கு பாத்திரமானார். “அதைத் தனக்கென  சொந்தமாக்கிக்கொள்ள" அதை முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சொந்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பின்னர், அதை மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தலாம்.

நம்முடைய விசுவாசத்தையும் அதை பிரதிபலிப்பதையும் சொந்தமாக்கிக் கொள்ளும்படியான ஒன்றைச் செய்ய பவுல் நம்மை அழைக்கிறார். பிலிப்பியர் 3இல், தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதற்கான முயற்சிகளை அவர் நிராகரிக்கிறார் (வச. 7–8). மாறாக, “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து," வாழ அவர் நமக்குக் கற்பிக்கிறார் (வச. 9). மன்னிப்பு மற்றும் மீட்பின் பரிசு நமது உந்துதலையும் இலக்குகளையும் மாற்றுகிறது: “கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" (வச. 12).

இயேசு நம் வெற்றியை உறுதிப்படுத்துகிறார். நம் வேலை? அந்த உண்மையை அறிந்துக்கொண்டு, தேவனின் வசனத்தை நாம் உள்வாங்கி, உடைந்த நம் உலகத்தின் மத்தியில் வாழவேண்டும். அதாவது, நாம் நமது விசுவாசத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக" (வச. 16) என்று வலியுறுத்துகிறார்.

 

சூரிய ஒளி வட்டம்

அது ஒரு வெப்பமான கோடை நாள். நானும் எனது நான்கு வயது பேத்தி ரிதுவும் பந்து விளையாடுவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வராந்தாவில் கண்ணாடி கோப்பையில் தண்ணீருடன் அமர்ந்திருந்தபோது, ரிது முற்றத்தைப் பார்த்து, “சூரிய ஒளி தரையில் படுவதைப் பாருங்கள்” என்றாள். இருண்ட நிழல்களுக்கு மத்தியில் ஒளியின் வட்டத்தை உருவாக்க சூரிய ஒளி அழகாய் ஊடுருவுகின்றது. 

சூரிய ஒளி வட்டம். இருண்ட நாட்களில் நம்பிக்கையைத் தேடுவதற்கு இது ஒரு அழகான படம் அல்லவா? பெரும்பாலும் சவாலான நேரங்களின் மத்தியில், நிழல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒளியின் மீது கவனம் செலுத்துவது சிறந்தது. 

அந்த ஒளிக்கு ஒரு பெயர் உண்டு - இயேசு. இயேசு மாம்சத்தில் வந்தபோது, உலகில் உதித்த பிரகாசத்தை விவரிக்க மத்தேயு ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத்தேயு 4:16; ஏசாயா 9:2ஐயும் பார்க்கவும்). “மரண இருளில்” நாம் வாழும்போது, பாவத்தின் விளைவுகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. ஆனால் அந்த இருளை பிரகாசிபிக்கிறவர், உலகின் மகத்தான மற்றும் புகழ்பெற்ற ஒளியான இயேசு (யோவான் 1:4-5).

“சூரிய ஒளியின் வட்டங்கள் மின்னுவது போல” இயேசுவின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒளி,  நம் இருளில் ஊடுருவி, நம் நாளை ஒளிரச் செய்யவும், நம் இதயங்களை நம்பிக்கையுடன் பிரகாசிக்கவும் செய்கிறது.

தேவனுடைய நன்மைகளைத் தொடர்ந்து..

எனது கல்லூரி நாட்களில், பெண்கள் துணிக்கடையில் நான் பகுதி நேர வேலை பார்த்தேன். அங்கு பொருட்கள் வாங்க வந்த சிலரை சந்தேகப்பட்ட கடையின் பெண் பாதுகாவலர் ஒருவர், அவர்கள் கடையில் பொருட்களை திருடியிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு பின் தொடர்ந்தார். அந்த கடையின் உரிமையாளருடைய பார்வையில் சந்தேகிக்கக்கூடியவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அவருடைய பார்வையில் நல்லவர்களாய் தெரிந்தவர்களை விட்டுவிட்டனர். சில கடைகளில் சந்தேகப்பட்டு, என்னையே பின்தொடர்ந்திருக்கின்றனர். அதினுடைய நுணுக்கங்களை இப்பொழுதும் நான் அறிந்துள்ளதால் அது ஒரு  சுவாரஸ்யமான அனுபவத்தையே கொடுத்தது.

இதற்கு நேர்மாறாக, தாவீது, தன்னை இரண்டு தெய்வீக ஆசீர்வாதம் பின்பற்றுவதாக அறிவித்தார். அவை கர்த்தரின் நன்மையும் கிருபையுமே. இந்த இரண்டு வரங்களும் எப்போதும் மெய்யான அன்போடு அவருடன் இருக்கும். “காக்கும் இரண்டு தூதர்கள்" என்று சுவிசேஷகர் சார்லஸ் ஸ்பர்ஜன் குறிப்பிடும் கர்த்தருடைய தூதர்கள், இருண்ட நாட்களிலும் பிரகாசமான நாட்களிலும் தேவனை விசுவாசிப்பவர்களின் கூடவே இருப்பார்கள். மந்தமான குளிர்கால நாட்களிலும் பிரகாசமான கோடைகால நாட்களிலும், அவருடைய நன்மை நம் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அவருடைய கிருபை நம் பாவங்களை மூடுகிறது.

ஒரு காலத்தில் மேய்ப்பனாக இருந்த தாவீது, கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் இணைக்கப்பட்டதின் நோக்கத்தை அறிந்திருந்தார். பயம், கவலை, சோதனை, சந்தேகம் போன்றவைகளும் நம்மைத் தொடரக்கூடியது. நிச்சயமாகவே தாவீதுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் எப்போதும் நம்மை தொடர்ந்து பிடிக்கிறது என்று அவர் நம்பினார்.

தாவீது, “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23:6) என்று மகிழ்ந்து களிகூறினார். இவைகளே நம்மைத் தொடர்ந்து வரக்கூடிய ஆச்சரியமான பரிசு. 

 

முழு உலகமும் பாடும்போது

1970களின் பிரபலமான விளம்பரம் ஒன்று ஒரு தலைமுறையையே ஊக்குவித்தது. கோகோ கோலாவின் “தி ரியல் திங்” விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் இசைக் குழுவினரால் உருவாக்கப்பட்டு, இறுதியில் ஒரு முழு நீளப் பாடலாக உருவெடுத்தது. அது உலகெங்கிலும் இருந்த இசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் ரோம் நகருக்கு வெளியே, ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் பாடிய அந்த பாடலின் தொலைக்காட்சி ஒளிபரப்பினை பலர் மறந்திருக்கமாட்டார்கள். தேனீக்களின் தரிசனம், பழங்களை ஈனும் மரங்கள், பாடலாசிரியரின் விருப்பத்தை உலகெங்கிலும் பறைசாற்றுவதற்கு அன்போடும், ஒற்றுமையுடனும் அப்பாடலை நாம் எதிரொலித்தோம். 

அப்போஸ்தலனாகிய யோவான், அந்த இலட்சியக் கனவைப் போன்ற ஒன்றை விவரிக்கிறார். அது மிகப் பெரியது. “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்” (வெளி. 5:13) பாடிய ஒரு பாடலை அவர் கற்பனை செய்தார். இந்த பாடலில் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆனால் நமக்கான பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்தவருக்காய் பாடப்பட்டது. யுத்தம், மரணம் மற்றும் பாதிப்புகள் என்று நம் கண் முன்னே நிழலாடும் காரியங்களிலிருந்து அவருடைய அன்பின் தியாகம் நம்மை மேற்கொள்கிறது. 

ஆயினும் ஆட்டுக்குட்டியானவர்  நம் பாவத்தைச் சுமந்து, மரணத்தை ஜெயித்து, மரண பயத்தைப் போக்கவும், வானத்தையும் பூமியையும் முழு இணக்கத்துடன் பாட கற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்தார்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.